ராஜராஜ சோழன் காலத்தை போல கோவில் திருப்பணிகள் நடக்கின்றன- சேகர் பாபு பெருமிதம்

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
ராஜராஜ சோழன் காலத்தை போல கோவில் திருப்பணிகள் நடக்கின்றன- சேகர் பாபு பெருமிதம்
Published on

கரூர்:

கரூர் மாவட்டம் மண்மங்கலம் திரு முக்கூடலூரில் அகஸ்தீஸ்வரர் சாமி கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலில் அகஸ்தீஸ்வரர், இறைவி, அஞ்சனாச்சியம்மன் ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.

நிதி வசதி இல்லாத இக்கோவில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் தான்தோன்றி கல்யாண வெங்கடரமண சாமி கோவிலின் உபகோயிலாக இணைக்கப்பட்டது.

இக்கோவிலின் அகஸ்தீஸ்வரர் மணலால் பிடிக்கப்பட்டவர் எனவும், இங்கு அகத்திய முனிவர் வழிபட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.இக்கோவிலின் மதில் சுவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் முழுவதும் சேதம் அடைந்தது. சோழ மன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் தொடர்பாக கல்வெட்டுகள் இக்கோவிலில் காணப்படுகிறது .திருக்கோயில் உள்ள பழமையான கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோவிலை பழுது பார்த்து புனரமைக்க இந்து அறநிலையத்துறை சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி மூலம் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதி, அர்த்த மண்டபம், மகா மண்டபம், அம்பாள் சன்னதி, மடப் பள்ளி, ராஜகோபுரம் ஆகியவற்றில் புனரமைப்பு பணிகளும், சோபனா மண்டபம், வசந்த மண்டபம், அபிஷேக மண்டபம், சுப்பிரமணியர் சன்னதி ஆகியவற்றில் மீள கட்டுதல் பணிகளும், உப சந்நிதிகளில் வர்ணம் பூசும் பணிகளும், மேற்கு வடக்கு கிழக்கு மதில் சுவர்கள் பழுது பார்த்து புதுப்பித்தல் பணியும் நடைபெற உள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் 24 மாதங்களுக்குள் நடத்தி முடிக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார்.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

2022-23-ம் நிதி ஆண்டில் 113 கோயில்கள் ரூ.154.90 கோடி மதிப்பீட்டிலும், 2023-24 நிதி ஆண்டில் 84 திருக்கோயில்கள் ரூ.149.95 கோடி மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று உள்ளது. இந்த அரசு பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி களுக்கு மானியமாக ரூ.200 கோடி தமிழக அரசு வழங்கி உள்ளது.

இதுவரை ஆயிரம் ஆண்டுகள் பழமையான 12 கோயில்கள் திருப்பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 13 திருக்கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டது. மேலும் வரலாற்றில் படித்த ராஜ ராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில் கோவிலுக்கான திருப்பணிகள் நடைபெற்றது போல தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலும் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு அவர் பெருமிதத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com