திருமாவின் நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்துவிட்டது - தமிழிசை

திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார்.
திருமாவின் நாகரிக தலைவர் என்ற அடையாளம் உடைந்துவிட்டது - தமிழிசை
Published on

சென்னை:

தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும் தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொல்.திருமாவளவன் நடத்திய மாநாட்டில் தனக்கு காந்தியின் கொள்கைகள் பிடிக்காது. அவர் இந்து மதத்தில் தீவிரமாக இருந்தவர். சாகும்போது கூட ஹரே ராம் என்று கூறியவர் என்பதால் எனக்கு அவரை பிடிக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமாவளவனின் கட்சியில் கூட இந்து மத நம்பிக்கை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவ்வளவு ஏன் திருமாவளவன் இந்து மத நம்பிக்கை உள்ளவர்தான். அவர் காந்தி பிறந்தநாள் என்பதற்காக அக்டோபர் இரண்டாம் தேதி மாநாடு நடத்தவில்லை. அன்று நிறைந்த அமாவாசை நாள் என்பதால் அந்த நாளை தேர்வு செய்து இருக்கிறார் என்பதுதான் உண்மை.

தேசப்பிதாவை தினம் தினம் வார்த்தைகளால் கொன்று கொண்டிருக்கிறார். நான் திருமாவளவன் நாகரிகமான தலைவர் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த மேடையில் அவர் பேசியதை பார்த்ததும் அவர் மீது வைத்திருந்த மரியாதை சுக்குநூறாக உடைந்து விட்டது. அவரை வக்கிரதன்மையின் அடையாளமாக பார்க்கிறேன்.

காந்தியை விமர்சித்த பிறகும் திருமாவளவனை காங்கிரஸ் கூட்டணியில் வைத்திருக்கிறது. காங்கிரசை பொருத்தவரை காந்தியை விமர்சித்தால் கண்டு கொள்ள மாட்டார்கள். சோனியா காந்தியையோ ராகுல் காந்தியையோ விமர்சித்தால் மட்டுமே துள்ளி குதிப்பார்கள் என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com