

ராமநாதபுரம்:
தியாகி இமானுவேல் சேகரனார் 66-வது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின்படி இந்தாண்டு அ.தி.மு.க. சார்பில் பரமக்குடி இமானுவேல் சேகரனார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் இந்திய ராணுவத்தில் இணைத்துக்கொண்டு சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் எழுப்பியவர்.
இமானுவேல் சேகரனார் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரும் நிலையில் தற்போது தி.மு.க. அரசு அரசு விழாவாக அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் தி.மு.க.வால் சொல்ல மட்டுமே முடியும். அ.தி.மு.க. தலைமையிலான அரசு வந்த பின்னரே அரசு விழாவாக அறிவிக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.