7 பேர் விடுதலை விவகாரம்: கவர்னரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும்- ராமதாஸ்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக கவர்னரிடம் தமிழக அரசு மீண்டும் வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
ராமதாஸ்
ராமதாஸ்
Published on

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

7 தமிழர் விடுதலை விவகாரம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதால், இந்த விவகாரத்தில் தாமதமும், பின்னடைவும் ஏற்பட்டது உண்மை தான். ஆனால், உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துகளால் நிலைமை தெளிவாகி இருக்கிறது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலையை விரைவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வி‌ஷயத்தில் முடிவு எடுக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், இது குறித்து தமிழக கவர்னரே முடிவெடுக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்த வேண்டும்.

7 தமிழர் விடுதலை தொடர்பான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

கவர்னருக்கு கூடுதல் அழுத்தம் தருவதற்காக இந்த வி‌ஷயத்தில் ஒத்தக் கருத்துள்ள பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய குழுவையும் அழைத்துச் செல்லலாம்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு அடுத்த மாதம் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக இந்த வி‌ஷயத்தில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். புத்தாண்டிற்குள்ளாக 7 தமிழர்களும் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com