நாளை மறைமுக தேர்தல்... நெல்லை மாநகராட்சி தி.மு.க. மேயர் வேட்பாளர் அறிவிப்பு

மனுவை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.
Nellai Corporation
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணனுக்கும், கவுன்சிலர்களுக்கும் மோதல் போக்கு நீடித்ததால் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் ஆகஸ்டு 5-ந்தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.

மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டு மறைமுக தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

மேயர் வேட்பாளராக போட்டியிடும் கவுன்சிலர்கள் நாளை காலை 10.30 மணி முதல் 11 மணி வரை வேட்புமனுவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ராஜாஜி மைய கூட்ட அரங்கில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதன் மீதான பரிசீலனை காலை 11 மணி முதல் 11.30 மணி வரையிலும், அதனை திரும்ப பெறுவதற்கு 11.30 முதல் 11.45 மணி வரையிலும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போட்டி இருந்தால் தேர்தல் நடத்துவதற்கு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது.

இந்நிலையில் மேயர் வேட்பாளராக யாரை அறிவிக்கலாம் என ஆலோசனை நடத்துவதற்காக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் நெல்லை வந்தனர்.

இன்று காலை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் மாநகராட்சியில் உள்ள தி.மு.க. கவுன்சிலர்கள் 44 பேருடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த கூட்டத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

போட்டியின்றி கட்சி தலைமை முடிவு செய்யும் மேயர் வேட்பாளருக்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்து மேயராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

பின்னர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக 25-வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணனை அறிவித்தார். அவருக்கு கவுன்சிலர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

கவுன்சிலர் கிட்டு அப்துல் வகாப் எம்.எல்.ஏ.வின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் தி.மு.க.வின் மூத்த முன்னோடிகளில் ஒருவர். அவர் நெல்லை மாநகராட்சியில் 3-வது முறையாக கவுன்சிலராக தேர்ந்ததெடுக்கப்பட்டுள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கிட்டு, தனது வார்டு பகுதி முழுவதும் எப்போதும் சைக்கிளில் தான் பயணம் செய்யக்கூடியவர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com