தமிழகத்தில் நேர்மையான ஆட்சி மலர சபதம் எடுத்துள்ளோம்- அண்ணாமலை

ஜி.எஸ்.டி. வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது.தமிழகம் மட்டும் முன்னேறாததற்கு ஜி.எஸ்.டி. காரணம் அல்ல.
தமிழகத்தில் நேர்மையான ஆட்சி மலர சபதம் எடுத்துள்ளோம்- அண்ணாமலை
Published on

சென்னை:

சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் இது போன்ற ஒரு முதலமைச்சர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து மக்களுக்கும் நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் காமராஜர்.

காமராஜர் கண்ட கனவுகளை நாடு முழுவதும் பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார்.

தமிழக அரசியலில் மீண்டும் நேர்மையான, நியாயமான ஆட்சி வர வேண்டும் என்று சபதம் ஏற்றுள்ளோம். அதை நிறைவேற்றுவோம்.

காவியில் ஏன் தண்ணீர் வரவில்லை என்பதற்காக கர்நாடகாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருக்க வேண்டும். மேகதாது அணை கட்டியே தீருவோம் என காங்கிரஸ் கூறியுள்ளது. அதை பற்றிய தீர்மானத்தை காணவில்லை.

தி.மு.க.வின் தீர்மானங்கள் பொய்யும், புரட்டுமாக உள்ளது. மத்திய அரசை குறை சொல்வதாக மட்டுமே உள்ளது. தமிழகத்தின் உரிமை, கண்முன்னே பறிபோய் கொண்டு உள்ளது. அதை பற்றிய தீர்மானத்தை காணோம். இந்த கூட்டத் தொடரில் பா.ஜ.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள, எதிர்க்கட்சிகள் சொல்லும் பொய்களுக்கு விடை அளிப்பார்கள்.

பொது சிவில் சட்டம் குறித்து பொய் சொல்கின்றனர். ஜி.எஸ்.டி. வந்த பிறகு அனைத்து மாநிலங்களும் முன்னேறுகிறது. தமிழகம் மட்டும் முன்னேறாததற்கு ஜி.எஸ்.டி. காரணம் அல்ல. 20 முதல் 30 சதவீத கமிஷன் கேட்டால், தொழில்துறை எப்படி உள்ளே வரும்.

முதலமைச்சரும், உதயநிதியும் அமைச்சரவையில் ஆங்கிலம், இந்தி பேசுபவர்களை உடன் வைத்து கொள்ள வேண்டும். அப்படி வைத்து கொண்டால், பிரதமர் என்ன பேசினார் என்பது முழுமையாக தெரியும்.

இவர்கள் பிரதமரோடு துணை நின்று, சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையை பணி செய்யவிட்டால் செந்தில் பாலாஜி மொரிஷியசில் பதுக்கியிருக்கும் பணத்தை கொண்டு வந்து விடலாம். பிரதமர் கூறிய பணத்தில் செந்தில் பாலாஜியின் மொரிஷியஸ் பணம் இருக்கும். இதில் முதலமைச்சர் முடிவு எடுக்க வேண்டும். ராஜகண்ணப்பன் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. அவர்களது அமைச்சரவையில் எத்தனை பேர் வெளியே பணம் பதுக்கி வைத்துள்ளனர். எத்தனை பேர் பதுக்கி வைத்துள்ளனர் என்று வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். பிரதமர் கூறிய கருப்பு பணமாக இதுதானே.

இந்தியாவில், கருப்பு பணம் வெளியே பதுக்கி வைத்துள்ளவர்களில் தமிழக அரசியல்வாதிகள் தான் அதிகம் பேர் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை கொண்டு வந்தால் அதில் பாதி தி.மு.க., அமைச்சர்களின் கருப்பு பணம் இருக்கும். இதில் நடவடிக்கை எடுத்தால் நெஞ்சு வலி என சொல்லி மருத்துவமனையில் படுக்க வைத்து கொள்கின்றனர்.

கருப்பு பணம் குறித்து உதயநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுக்கு பேச தகுதியில்லை. ஏனெனில் அவர்கள் அதில் சம்பந்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com