

சென்னை:
தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
அதன்படி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு, ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி, இயக்குனர்கள் சங்கர், வெற்றி மாறன், பா.ரஞ்சித், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பலரும் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்ற நடிகர் சூரிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூரி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த தேர்தல்களில் நான் வாக்களித்துள்ளேன். ஆனால் இந்த முறை என்னுடைய பெயர் விடுபட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மனைவியின் பெயர் உள்ளது.
ஜனநாயக கடமையை ஆற்றமுடியவில்லை என்பது மன வேதனையாக உள்ளது. எங்கு தவறு நடந்ததென தெரியவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீதம் வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.