

ராமநாதபுரம் எம்.எஸ்.பி நகர் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுமி, மர்மமான முறையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தின் பின்னணி..
எம்.எஸ்.பி நகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி தன் பாட்டி பக்கத்தில் இரவில் தூங்கிக்கொண்டிருந்தாள். அதிகாலையில் விழித்து பார்க்கையில் சிறுமி காணாமல் போயிருப்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், காலை முதலே சிறுமியை பல இடங்களில் தீவிரமாகத் தேடி வந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கிணற்றில் சடலமாக மீட்பு..
நீண்ட நேரத் தேடலுக்குப் பிறகு, அருகில் இருந்த பக்கத்து வீட்டுப் பகுதி ஒன்றின் கிணற்றில் சிறுமி சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணை மற்றும் பொதுமக்கள் புகார்..
சிறுமி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது கடத்திச் சென்று கொலை செய்து கிணற்றில் வீசினரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், அப்பகுதியில் இரவு நேரங்களில் வடமாநிலத் தொழிலாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.