சட்டப்பேரவையில் 'தண்ணீர் பாட்டில்' கோரிக்கை விடுத்த பிரேமலதா- ஓபிஎஸ் கருத்தால் எழுந்த சிரிப்பலை!

சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்த 37 நிமிட உரையில் 37 உச்சரிப்பு பிழைகள் இருந்தது.
DMDK Gen Sec Premalatha Vijayakanth
Published on

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 3-வது நாளில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றியதாவது:-

ஆளுநர் உரை ஆளுங்கட்சி உரையாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் வாசித்த 37 நிமிட உரையில் 37 உச்சரிப்பு பிழைகள் இருந்தது. இது காதில் ஈட்டி வந்து பாய்ந்ததுபோது இருந்தது என்றார்.

பிரேமலதாவின் உரையை இடைமறித்த சபாநாயகர்,"வேறு மொழியை தாய் மொழியாக கொண்ட ஆளுநர் அர்லேகரை தமிழை சரியாக உச்சரிக்கவில்லை என விமர்சிக்கக்கூடாது" என்றார்.

மேலும் அவர்,"வேறு மாநிலத்தை சேர்ந்த ஆளுநர் நமது தலைவரகளின் பெயர்களை உச்சரிப்பதையே நாம் பாராட்ட வேண்டும். தமிழை கற்க நமது ஆளுநர் ஆசைப்படுகிறார் என்பது நான் அவரை சந்தித்தபோது அறிந்தேன். உரையில் எந்த தலைவர் பெயரையும் தவிர்க்காமல் ஆளுநர் படித்ததே பாராட்டுக்கு உரியது. ஆளுநர் அர்லேகர் அன்றைய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக்கொடுத்தார், அவரை நாம் பாராட்ட வேண்டும்" என்றார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, பேரவையில் டம்ளருக்கு பதில் கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு அவரவர் மேஜைகளில் தண்ணீர் டம்ளர்களுக்கு பதில் குடிநீர் பாட்டில்கள் வைக்க வேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை என்பதால் கண்ணாடி பாட்டில்களில் வைக்கலாம் என்றார்.

பிரேமலதாவின் கோரிக்கையை தொடர்ந்து, அண்ணியார் கூறியதுபோல் சட்டசபையில் குடிநீர் பாட்டில்கள் வைத்தால் தூற்றி எறிந்துவிடுவார்கள் என ஓ.பன்னீர்செல்வம் பேசியதால் சபையில் சிரிப்பலை எழுந்தது.

ஓ.பன்னீர்செல்வம் சொன்னதை தொடர்ந்து, அவர் தனது சொந்த அனுபவத்தில் பேசுகிறார் என தங்கம் தென்னரசு கூறியதும் மீண்டும் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.

மேலும் பேசிய பிரேமலதா,"சுகாதாரமற்ற குடிநீரால் உடல்நல பிரச்சனைகள் வருகிறது. அதனால், விருத்தாசலத்திற்கு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வரவேண்டும். விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com