மாப்பிள்ளை சீமான்.., 2 மாதத்துக்கு முன்பு சேர்ந்திருந்தால்., அழைப்பு விடுத்த பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது.
சரத்குமார் பிறந்த நாள் விழா
சரத்குமார் பிறந்த நாள் விழா
Published on

அகில இந்திய சரத்குமார் ரசிகர் நற்பணி மன்றம், நாட்டாமை குடும்பத்தினர் சார்பில் முன்னாள் எம்.பி.யும், பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் பிறந்த நாள் விழா நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூரில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.

சீமானுக்கு அழைப்பு

பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தங்களது கூட்டணியில் சேருவதற்கு விழா மேடையிலேயே நேரடியாக அழைப்பு விடுத்தார்.

நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

சரத்குமாருக்கு 72 வயதானாலும் அவர் எண்ணத்தாலும், செயலாலும் அவரது வயது 27-தான். இந்த மேடையில் மாப்பிள்ளை சீமான் உள்பட அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து இருப்பதை பார்க்கும்போது அழகாகத்தான் உள்ளது. இதுபோன்று மேடை 2 மாதங்களுக்கு முன்பு சேர்ந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலைமை என்னவாகி இருக்கும். பார்ப்போம். இனிமேல் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்
சரத்குமார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டவர்கள்

தமிழகத்தில் சிலர் எடுத்த எடுப்பிலேயே முதல்-அமைச்சராக வந்து விடுகிறார்கள். ஆனால் முதல்-அமைச்சருக்கான முழு தகுதியும் சரத்குமாரிடம் உள்ளது. சரத்குமார் தேசிய உணர்வோடு அவரது கட்சியை பா.ஜனதாவுடன் இணைத்து கொண்டார். நிச்சயமாக அவருக்கு பதவி தேடிவரும்.

இவ்வாறு நயினார் நாககேந்திரன் பேசினார்.

இடைத்தேர்தல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்து உள்ளனர். இந்த 6 தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இவற்றில் அம்பாசமுத்திரம் சட்டம்ன்ற தொகுதியில் சீமான் பொதுவேட்பாளராக களம் இறங்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதைத் தொடர்ந்து சீமானுக்கு இடைத்தேர்தலில் பா.ஜனதா கட்சி ஆதரவு அளிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் சரத்குமார் பேசியதாவது:-

நான் சினிமாவில் இருந்து திடீரென அரசியலுக்கு வந்தவன் அல்ல. எனது குடும்பமே அரசியல் பின்னணி கொண்ட குடும்பம்தான். உண்மையாகவும் நேர்மையாகவும் உழைப்பவர்களை யாராலும் எப்போதும் தோற்கடிக்க முடியாது. உடல் வலிமையும், கடின உழைப்பும் இருந்தால் இளைஞர்கள் சாதனையாளராக முடியும்.

எதையும் சாதிப்பதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் இருக்க வேண்டும். என்னால் 150 ஆண்டுகள் வரையிலும் வாழ முடியும். சீனர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் தாண்டி வாழ்கிறார்கள். அதற்கு உடல் வலிமையும் மன வலிமையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சீமான் இந்த மண்ணில் தேர்தலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அது காலத்தின் கட்டாயமாக இருக்கும். சாதி, மத வேறுபாடற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com