கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!

கிராம சபையின் நம்பிக்கை என்பது கூட்டம் முடிந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகளில்தான் உள்ளது.
கிராமசபை கூட்டத்திற்கு 7 நாட்களுக்கு முன்பே  அறிவிப்பு வெளியிட வேண்டும் - முதலமைச்சர் விஜய்க்கு கமல்ஹாசன் கடிதம்!
Published on

கிராம சபைக் கூட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது;

“தமிழ்நாடு மக்கள் உங்கள் தலைமையின் மீது நம்பிக்கை வைத்து, மாநிலத்தை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை உங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

உங்கள் தலைமையில், அரசை மக்களிடம் மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும் மக்களாட்சி மற்றும் நிர்வாக அமைப்புகளை மேலும் வலுப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு உள்ளது.

வருகிற அக்டோபர் 2-ம் தேதி நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டங்களில் ஊர் தொடர்பான பிரச்சனைகளை விவாதித்து, உள்ளாட்சி நிர்வாகத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.

இது தொடர்பாக, நான் பின்வரும் கோரிக்கைகளைத் தங்களது பரிசீலனைக்கு  வழங்குகிறேன்:

பஞ்சாயத்துப் பிரதிநிதிகளின் மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்துதல் வேண்டும். தற்போது அவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியமானது மிகவும் குறைவாக உள்ளது.

உதாரணமாக, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களின் மாதாந்திர மதிப்பூதியமானது 2021-ல் ரூ.1,000-லிருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்பட்டது.

  • தமிழ்நாடு அரசு இந்த மாதாந்திர மதிப்பூதியத்தை கணிசமாக உயர்த்தப் பரிசீலிக்க வேண்டும்.

  • உள்ளூர் டாஸ்மாக் கடைகள் குறித்த முடிவில் கிராம சபைக்கு அதிகாரம் அளித்தல்.

  • கிராம வளர்ச்சித் திட்டமிடலை பொதுமக்கள் உண்மையாகப் பங்கேற்கும் ஒரு செயல்முறையாக மாற்றுதல்.

  • உள்ளாட்சி நிர்வாகத்தில் ஆராய்ச்சி மற்றும் செயல்திறன் மேம்பாட்டை வலுப்படுத்துதல்.

  • கிராம சபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் மீது குறிப்பிட்ட கால வரம்பிற்குள் நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்தல்.

  • தங்கள் தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை மக்கள் உணரும்போது, கிராம சபையின் மீது நம்பிக்கை அதிகரித்து, மக்கள் பங்கேற்பும் இயல்பாகவே உயரும்.

  • அடிமட்ட அளவில் வலுவான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை கலாச்சாரத்தை உருவாக்குதல்.

  • காந்தியடிகளின் கிராம ஸ்வராஜ் (கிராம சுயராஜ்யம்) கனவு, அதிகாரம் பெற்ற கிராமங்களையும், பொதுமக்கள் பங்கேற்கும் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்டது.

  • அதற்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதை, கிராம நிர்வாகத்தில் தமிழ்நாட்டை இந்தியாவின் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாற்றுவதுதான்.

  • கிராம சபைக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பே பொது அறிவிப்பும், விவாதப் பட்டியலும் வெளியிடப்பட வேண்டும் என்ற அரசின் விதியைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உங்கள் தலைமையில் தமிழ்நாட்டின் கிராம சபைகளை மேலும் வலுப்படுத்தவும், அதிக மக்கள் பங்கேற்பு கொண்டதாகவும், தன்னாட்சி பெற்றதாகவும் மாற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com