

தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் மக்கள் பணி மற்றும் சாதனை விளக்க நிகழ்ச்சி கோவை கவுண்டம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், திமுக தரப்பிலிருந்து தமக்கு வந்ததாகக் கூறப்படும் ரூ.15 லட்சம் பேக்கேஜ் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இவ்வாறு அவர் பேசியதாவது:-
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், திமுகவின் கரூர் கம்பெனி என்று நான் குறிப்பிடும் தரப்பிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான ஒரு பேக்கேஜ் என்னிடம் வந்தது.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகதான் வெற்றி பெறும் என்று ஜோதிட ரீதியாக யூடியூப் சேனலில் பேச வேண்டும் என்று என்னிடம் கூறப்பட்டது.
அப்போது நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இல்லை. எங்கள் தலைவரிடமிருந்தும் எனக்கு அழைப்பு வரவில்லை. இருந்தபோதிலும், அப்போதே ‘திமுக ஆட்சிக்கு வராது’ என்று நான் தெளிவாகக் கூறினேன்.
ஆனால், திமுகதான் வெற்றி பெறும் என்று சொல்ல வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
இன்று இதை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு காரணம், மக்கள் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அரசியலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை பணம் கொடுத்து ஜோசியம் மூலம் உருவாக்க முடியாது.
மக்களின் தீர்ப்புதான் இறுதி தீர்ப்பு. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எதைப் பேசினாலும் நான் அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதற்காகத்தான் சட்டமன்றத்திற்கு நாம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம். மக்கள் குரலை எழுப்புவதில் எந்த சமரசமும் செய்ய மாட்டேன்.
சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி பேசுபவர்கள், தைரியம் இருந்தால் நேரில் வந்து பேசலாம். என்னைப் பற்றி பல்வேறு விமர்சனங்கள் வருகின்றன. ‘அழகான பொம்மை’ என்று சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால் இந்த அழகான பொம்மை தேவைப்பட்டால் ஆபத்தான பொம்மையாகவும் மாறும்.
நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய நேரம் வரும். மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் அடுத்தடுத்த தேர்தல்களில் தனது வலிமையை நிரூபிக்கும். 2031-ல் தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய சக்தியாக இருக்கும்.
கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஒரு குடும்பத்தில் இருப்பதைப் போல நமக்குள் சிறிய சண்டைகள் இருக்கலாம். ஆனால் வெளியில் இருந்து யாரும் நம்முடைய ஒற்றுமையைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.
சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து கேள்விகள் எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் கேள்விகளை எழுப்புகின்றனர். இதனால் சபாநாயகருக்கும் தொடர்ந்து பணிச்சுமை ஏற்படுகிறது.
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடும் இடங்களில் மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும். ஒரு இடத்தையும் பாக்கி வைக்காமல் வெற்றி பெறும் அளவுக்கு மக்கள் நமக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.
மக்களுக்காக பேசுவதற்கும், மக்களுக்காக நிற்பதற்கும் நான் எப்போதும் தயாராக இருக்கிறேன். அரசியலில் பணம், பொய் பிரசாரம், போலியான கணிப்புகள் ஆகியவற்றை விட மக்களின் நம்பிக்கையும் தீர்ப்புமே முக்கியம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.