

நாமக்கல்:
நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒரே கல்லால் ஆன 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வளாகத்தில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக உண்டியல்கள் வைக்கப்பட்டு உள்ளன.
இவை 3, 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்படும். அந்த வகையில் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) ஜான்சிராணி, ஈரோடு உதவி ஆணையாளர் அன்னக்கொடி, கண்காணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் உள்ள காணிக்கை பக்தர்கள் மூலம் எண்ணப்பட்டன.
அந்த உண்டியலில் ரூ.48 லட்சத்து 40 ஆயிரத்து 249 ரொக்கம், 49 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் தங்கம், 135 கிராம் வெள்ளி இருந்ததாக அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உண்டியல் திறக்கப்பட்டபோது ரூ.28 லட்சத்து 92 ஆயிரத்து 819 ரொக்கம் இருந்தது குறிப்பிடத்தக்கது.