மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் விக்னேஷ்!

டாஸ்மாக்கில் கூடுதல் 10 ரூபாய் வசூலை தடுக்க அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்கும்.
Minister Vignesh
Published on

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த விவரங்களைச் செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன், முதற்கட்டமாக மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தளங்களின் அருகே இயங்கி வரும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின்படி, தற்போது 717 கடைகளும் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் எண்கள் மற்றும் முகவரிகள் அடங்கிய பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் சமூக ஊடகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

"முதலமைச்சரின் உத்தரவின்படி 717 டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாகக் கோயம்பத்தூர் மாவட்டத்தில் தான் மிக அதிகமான கடைகள் அகற்றப்பட்டுள்ளன. மக்கள் நலனே முக்கியம் என்பதால், அதிக வருவாய் ஈட்டித் தந்த முக்கியமான கடைகளும் இதில் மூடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதால், எஞ்சிய சில கடைகளில் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. எனினும், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் நலனே நமது முதலமைச்சரின் ஒரே நோக்கம்.

இந்த நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட நினைப்பவர்கள் அல்லது அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க முயல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்.

மேலும், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிப்பதைத் தடுக்க அரசு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விக்னேஷ் எச்சரித்துள்ளார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com