

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியை தாண்டியது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. இதையடுத்து கடந்த 1-ந் தேதி முதல் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்தை பொறுத்து தமிழகத்துக்கு காவிரியில் அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி கபினி அணைக்கு வினாடிக்கு 8448 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அதே போல் கிருஷ்ண ராஜ சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124.80 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 109.74 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4875 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 2310 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று காலை வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேட்டூர் அணைக்கு நேற்று மாலை வினாடிக்கு 8583 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை வினாடிக்கு 7833 கனஅடியாக குறைந்து வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறந்து விடப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 80.31 அடியாக இருந்தது. கர்நாடகாவில் மழையின் தீவிரம் அதிகரித்து உபரிநீர் திறப்பு அதிகரித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.