கள்ளச்சாராய உயிரிழப்புகள் : கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த தே.மு.தி.க.

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. 30-க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர்.
கள்ளச்சாராய உயிரிழப்புகள் : கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்த தே.மு.தி.க.
Published on

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 47 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே உலுக்கி வருகிறது. சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்தனர்.

அங்கு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். கள்ளச்சாராய சம்பவத்திற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தன. இந்த வரிசையில், தே.மு.தி.க. சார்பில் ஜூன் 25 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பாக ஜூன் 25, செவ்வாய்க்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது."

"இதில் மாவட்ட கழக செயலாளர்கள் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் அனைத்து ஒன்றிய நகர பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணி பொதுமக்கள் என அனைவரும் பெருமளவில் கலந்து கொண்டு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றி ஆர்ப்பாட்டமாக நடத்தித் தர வேண்டும் அன்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com