

செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரவீன் குமார், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்தார். இந்நிலையில், பெண்ணின் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்த காதலால் ஆத்திரமடைந்த கும்பல், பிரவீன் குமாரை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டியது. அப்பகுதி வாசிகளால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்போரூர் காவல்துறை அதிகாரிகள், தையூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை, மணிகண்டன், நந்தீஸ், கவுதம் ஆகிய 4 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த படுகொலையில் தொடர்புடைய தலைமறைவான மற்ற குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பிரவீனின் மரணச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவரது உறவினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் திரண்டு பழைய மகாபலிபுரம் சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்யக் கோரி 500-க்கும் மேற்பட்டோர் நடத்திய சாலை மறியலால் பல மணி நேரம் போக்குவரத்து முடங்கியது. காவல் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பிறகே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இயக்குநர் பா.ரஞ்சித் தலைமையிலான ‘நீலம் பண்பாட்டு மையம்’ இக்கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவக் கொலைகள் சமூகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகக் கவலை தெரிவித்துள்ள அம்மையம், சாதி வெறிப் படுகொலைகளைத் தடுக்கத் தமிழக அரசு உடனடியாக ‘ஆணவக் கொலை தடுப்பு தனிச்சட்டம்’ இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.