

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா இன்று தொடங்கியது.
இந்த உணவு திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபுவும் கலந்து கொண்டார். இருவரும் பரிமாறப்பட்ட உணவுகளை சுவைத்தனர்.
உணவு திருவிழா இன்று தொடங்கி 24-ந்தேதி வரை சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது. இன்று மட்டும் 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும். நாளை முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உணவு வகைகளும், விலைப் பட்டியல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்பெஷல் உணவாக பார்க்கப்படும் உணவுகள் பட்டியலிடப்பட்டு அதற்கான விலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த உணவு பட்டியலில் அதிக விலையாக கரூர் நாட்டுக் கோழி பிரியாணியும் சிவகங்கை நெய் சாதம்+மட்டன் உப்பு கரியும் (விலை ரூ.250 ) விற்கப்படுகிறது.
உணவு திருவிழாவிற்கு வருகை தரும் பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.