

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதாக முதலமைச்சர் விஜய் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தெரிவித்தார். பரந்தூருக்கு பதில் மாற்று இடம் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தவெக அரசின் இந்த முடிவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காரணம் புது இடம் தேர்விற்கு நீண்டநாட்கள் பிடித்து மீண்டும் அந்த இடத்திற்கான பல்வேறு அனுமதிகளை மத்திய அரசிடம் இருந்து பெற சில ஆண்டுகள் ஆகலாம். இது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பின்னடைவாக அமையும்.
இந்நிலையில் தவெக அரசின் இந்த முடிவிற்கு பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில்.,
“விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை தேர்வு செய்யாமல், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக நீங்கள் சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை பின்னோக்கி இழுப்பதற்கான ஏற்பாடு.
பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி, இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்காமல், எந்த இடத்தை தேர்வு செய்யப் போகிறோம் என்ற தெளிவும் இல்லாமல், எதற்காக இந்த அவசர முடிவு? விமான நிலையத்திற்கான இடத்தை புதிதாக தேர்வு செய்வது என்பது அத்தனை எளிதா?
சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டு, பயணப் போக்குவரத்து, மணலின் தன்மை, தேவை, தேவைத்தன்மை மற்றும் பல அம்சங்களையும் கோணங்களையும் ஆராய்ந்ததன் அடிப்படையில் தான் புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஆனால், தேர்தலின் போது பரந்தூரை நீங்கள் தேர்தல் பரப்புரைக் களமாக பயன்படுத்திக் கொண்ட ஒரே காரணத்திற்காக, விமான நிலையம் அமைப்பதற்கான மிகப்பெரிய “செயல்முறை”- ஐயும் மீண்டும் முதலில் இருந்து துவங்க நீங்கள் முடிவு செய்திருப்பது, நேர விரயம், பண விரயம், மற்றும் வளங்களின் விரயம்.
உங்கள் தனிப்பட்ட அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நீங்கள் தடை போடுவது கண்டனத்திற்குரியது.
அதுமட்டுமன்றி, பரந்தூர் விமான நிலையம் அமைக்க ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட1700 ஏக்கர் நிலங்களை உங்கள் அரசு என்ன செய்யப் போகிறது? நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் படி, இந்த நிலங்களை விமான நிலையம் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்பது உங்களுக்கு தெரியாதா?
மேலும் இழப்பீட்டுத் தொகை பெற்றுக் கொண்டு தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுத்த மக்களுக்கு உங்கள் அரசு என்ன பதில் வைத்திருக்கிறது?
எனவே ஆரம்பம் முதலே எங்களின் கேள்வி ஒன்றே ஒன்று தான், தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழ்நாட்டிற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? பதிலளியுங்கள் ஜோசப் விஜய் அவர்களே!” எனக் குறிப்பிட்டுள்ளார்.