மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம்: 500 பட்டியலின பெண்களை திரட்டி நாளை குஷ்பு வீடு முற்றுகை- காங்கிரஸ்

நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம்.குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றி இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம்.
மன்னிப்பு கேட்கும் வரை ஓயமாட்டோம்: 500 பட்டியலின பெண்களை திரட்டி நாளை குஷ்பு வீடு முற்றுகை- காங்கிரஸ்
Published on

சென்னை:

பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு சேரிமொழி என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு கோர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஆனால் குஷ்பு, தான் தவறாக எதுவும் பேசவில்லை சேரி என்பது தவறான வார்த்தை அல்ல என்று விளக்கம் அளித்தார்.

ஆனால் காங்கிரஸ் அதை ஏற்கவில்லை. குஷ்பு வீட்டை இன்று முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் நாளை (28-ந்தேதி) முற்றுகை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் கூறியதாவது:-

இன்றைய தினம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு விழா ஆகிய 2 பெரிய நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் தான் எங்கள் போராட்டத்தை தள்ளிவைத்து உள்ளோம்.

நாளை காலை திட்டமிட்டபடி குஷ்பு வீட்டை முற்றுகையிடுவோம். 500க்கும் மேற்பட்ட குடிசைப்பகுதி பெண்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

சேரி என்பது இழிவானது அல்ல என்பதை ஒத்துக்கொள்கிறோம். அந்த வார்த்தையை எதற்காக பயன்படுத்தினார் என்பது தான் முக்கியம். தான் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று ஆணவமாக கூறி இருக்கிறார். அவர் மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை.

தவறான கருத்துக்களை சொல்லி மன்னிப்பு கேட்ட வரலாறும் உண்டு என்பதை அவர் மறக்கக்கூடாது. அதே போல் சேரியை விமர்சித்து கோர்ட்டில் மன்னிப்பு கேட்டவர்களும் உண்டு. எனவே நாங்கள் இதை சும்மா விடப்போதில்லை.

குஷ்பு மீது வழக்கு தொடருவது பற்றியும் இன்று வக்கீல்களுடன் ஆலோசிக்க இருக்கிறோம். எனவே அவர் மீது விரைவில் வழக்கும் தொடருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com