என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு வழங்க முதலமைச்சர் உத்தரவு
- அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது நாளை காலைக்குள் மாமல்லபுரம்- மரக்காணம் இடையே கரையை கடக்கிறது. சென்னையில் நேற்று இரவு முதல் மிதமான மழை பெய்யத் தொடங்கி இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டாலும் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்குகிறது.
இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய உணவை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.
தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே மழைக் காலங்களில் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்க மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முழுவதும் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி அலுவலக கட்டுப்பாட்டு அறைகளுக்கு பொதுமக்களிடமிருந்து தொலைபேசி வாயிலாக பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.






