

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் சட்டப்பேரவையில் இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றத்தில் நடைபெற்ற உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது அவர் வெளியிட்ட முதன்மையான அறிவிப்புகள்;
அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2021-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.5-இன் அடிப்படையிலும், அரசு மற்றும் அரசு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் உதவிபெறும் பலவகை கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2020-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண்.19 மற்றும் 20-இன் அடிப்படையிலும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட CAS திட்டம், இது தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து, 2026 செப்டம்பர் 1-ம் தேதி முதல் நிதி பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6,000 உதவி பேராசிரியர்கள் மூன்று கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள்.
அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30,000/-லிருந்து ரூ.35,000/-ஆகவும், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரிபவர்களின் தொகுப்பூதியம் ரூ.25,000/-லிருந்து ரூ.30,000/- ஆகவும் உயர்த்தப்படும்.
மாணாக்கர்கள் உயர்கல்வியைத் தடையின்றி தொடர்வதற்காக, 20 லட்சம் ரூபாய் வரையிலான பிணையற்ற கல்விக் கடன் வழங்க 'கல்வி உத்தரவாதத் திட்டம்' (Education Guarantee Scheme) செயல்படுத்தப்படும். இதற்கென தொகுப்பு நிதி உருவாக்கப்படும். இத்திட்டம் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் செயல்படுத்தப்படும்.
செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்திற்காக தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ.5 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.50 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாட்டிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஜெர்மன் மற்றும் ஜப்பானிய மொழிப் பயிற்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு கலை மற்றும் கல்லூரிகளில் அறிவியல் பயின்று, அடிப்படை அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்து, முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்கு நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் திருநர் மாணாக்கர்களின் கல்வி, வாழ்வாதாரம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக, அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் 50 திருநர் மாணாக்கர்களுக்கு தலா ரூ.2 இலட்சம் நிதியுதவி வழங்கப்படும். இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த முதல் தலைமுறை மாணாக்கர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்படும்.
விவசாய நிலம் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக உள்ள விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணாக்கர்கள், அரசு கல்லூரிகள்/அரசு பல்கலைக் கழகங்களில் படிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முழு கல்விகட்டணம் விலக்கு அளிக்கப்படும்.
உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில உருது அகாடமியில் உருது மொழி மேம்பாட்டிற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் பழமையான ஆவணங்களின் மின்னுருவாக்கம் மற்றும் பாதுகாப்பு திட்டத்திற்கென 2026-27 முதல் ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.31.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
உயர்கல்வித் துறையின் பணியாளர்கள், அரசு கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட 500 அலுவலர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்காக ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அடிப்படை அறிவியல் பாடங்களில் சிறப்புமிக்க கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கான ஒரு தனிச்சட்டம் இயற்றப்படும்.
தமிழ்நாட்டிற்கென தனித்துவமான அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை உருவாக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கணினியியல், உயிரித் தொழில்நுட்பம், காலநிலைத் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம் மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் துறைகளில் பட்டப்படிப்புகளை வழங்கும் வகையில், “பெரியார் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான நிறுவனம் (PIET)" நிறுவப்படும்.
அரசு கல்லூரிகளின் ஆய்வக நுகர்பொருட்களின் தேவைகளுக்காக, 270 அரசு கல்லூரிகளுக்கு ரூ.8.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாட்டில் உள்ள 130 நிலை || (Grade II) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 260 ஊடாடும் திறன் பலகைகள் (Interactive Smart Boards) வழங்க ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்குத் தேவையான தளவாடங்கள் வழங்க ரூ.36.26 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
அரசு கல்வி நிறுவனங்களின் கல்விசார் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு பெருந்தலைவர் காமராசர் கல்லூரி மேம்பாட்டுத் திட்டம் (நிலை - 2) 2026-27 முதல் ஐந்தாண்டுகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2026-27ஆம் ஆண்டில், கூடலூர், சிவகாசி, ஒரத்தநாடு மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிலை 2-லிருந்து நிலை 1-ஆக தரம் உயர்த்தப்படும்.
2026-27 ஆம் ஆண்டில் NAAC அங்கீகாரம் பெற்ற 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி கல்லூரிகளாகத் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.