அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு

கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.
அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14-ஆக உயர்வு
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 2 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்று முன்தினம் வரை 10 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், நேற்று சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரீட்டா ஜுஜிங்கா, பிங்கி ஜுஜிங்கா மற்றும் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சுமித்ரா ஜிங்கா ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்டை சேர்ந்த பிரித்தி தேவி (29) உயிரிழந்தார். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com