கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்.
கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்: அதிமுக போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி- எடப்பாடி பழனிசாமி
Published on

கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டனர்.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு வரவேற்பு அளித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதிவேண்டியும், சிபிஐ விசாரணை கோரியும் தொடர்ந்து சட்டமன்றம், நீதிமன்றம், மக்கள் மன்றம் என அனைத்துத் தளங்களிலும் போராடிய முதன்மையான இயக்கம் அதிமுக.

நமது தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக, அஇஅதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து மடியில் கனமில்லை என்றால் விடியா திமுக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யக் கூடாது!

சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com