

வடமாநில குடும்பத்தினரின் முழு விபரத்தையும் போலீசார் சேகரித்து பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்ப நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகளுக்காக பீகார், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வருகிறார்கள். தற்போது அனைத்து ஓட்டல், டீக்கடை, கட்டுமான பணிகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளிலும் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு தமிழகத்திற்குள் வரும் வடமாநில தொழிலாளர்கள் பற்றிய முழுவிபரங்கள் முறையாக கணக்கெ டுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு சிக்குவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் திருவள்ளூர் பகுதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 100 குடும்பத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் திருவள்ளூர், புதிய பஸ்நிலையம் அருகே சென்னை-திருப்பதி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ் தஞ்சம் அடைந்து உள்ளனர். அங்கேயே அவர்கள் கட்டில் போட்டு படுத்து தூங்குகிறார்கள். கியாஸ் சிலிண்டர் வைத்து சமையல் செய்து வீடுபோல் அங்கேயே சாலையோரத்தில் குடியேறி உள்ளனர். இவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் திருவள்ளூர் நகர் மற்றும் சுற்றி உள்ள கிராமத்துக்குள் சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
மேம்பாலத்தின் கீழ் தங்கி உள்ள வடமாநில குடும்பத்தினர் எதற்காக இங்கு வந்தனர். பணி செய்யும் இடத்திற்கு செல்லாமல் சாலையோரத்தில் தங்கி இருப்பது ஏன்? அவர்களை பணிக்காக அழைத்து வந்தது யார்? உள்ளிட்ட அவர்களை பற்றிய முழு விபரத்தையும் போலீசார் சேகரித்து பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்ப நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.