

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படு வருவதால் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
சம்பள உயர்வு, பென்ஷன், நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்தனர். இதையடுத்து சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் வேலைக்கு, ஊருக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
இந்நிலையில், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செங்கோட்டையன், தங்மணி உள்ளிட்டோர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டியதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்தன.