

சென்னை:
தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கமலாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
யார் மக்களுக்காக களத்தில் இறங்கினாலும் மகிழ்ச்சிதான். இன்றைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருக்கிறார்களா?
எண்ணூருக்கு போகட்டும், மக்களுக்காக ஏதாவது செய்யட்டும். களத்தில் இறங்கட்டும். சுற்றுப்பயணம் செய்யட்டும், மீனவ சமுதாயத்திற்கு நல்லது நடந்தால் மகிழ்ச்சியே. தங்களது பங்களிப்பையும் அளிக்கட்டும்.
பார்க்கலாம், எப்படி அரசியலுக்கு வருகிறார்கள் என்பதை பார்க்கலாம். ஏற்கனவே தொடர்ந்து அரசியல் தலைவர்களும் மக்கள் நலனுக்காகத்தான் உழைத்துக் கொண்டுள்ளார்கள்.
ஏதோ இவர்கள் மட்டும் தான் வந்து அரசியல் செய்துவிட முடியும் என்பது இல்லை. மக்கள் யாரை ஏற்றுக்கொண்டாலும் சந்தோஷம்தான். மக்கள் புத்திசாலிகள்தான், யாரை ஏற்றுக் கொள்ள வேண்டுமோ அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
நான் தம்பி விஜய்க்கு எதிராக கருத்து சொன்னேன் என்பது மிக மிக தவறான கருத்து. நான் ‘மெர்சல்’ படத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிராக சொல்லப்பட்ட கருத்தைத்தான் எதிர்த்தேன்.
இப்போதும் ஜி.எஸ்.டி.க்கு எதிராக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டால் நிச்சயமாக என்னுடைய ஆழமான எதிர்ப்பை பதிவு செய்வேன்.
ரேஷன் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதே பா.ஜனதாவின் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறினார்.