

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்டத்தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்றார்.
தமிழகத்தில் பா.ஜனதா மேற்கொண்டுள்ள தமிழ் தாமரை யாத்திரையில் 17-வது மாவட்டமாக கோவை தெற்கு மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சிக்கு வந்துள்ளேன். இந்த பகுதி தற்போது கடும்வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனைமலையாறு மற்றும் நல்லாறுதிட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இதுபோல், தமிழகத்தில் பாண்டியாறு, அத்திக்கடவு அவினாசி திட்டம் போன்ற பல்வேறு தொலைநோக்கு நீர்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அவற்றை செயல்படுத்த வேண்டும்.
தமிழக அரசியல் இரு நடிகர்களைசுற்றி அமைந்துள்ளது என்பது போல் மாயதோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தத்தால் புதியபடங்கள் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் திரையரங்குகள் மூடப்படும் நிலை உள்ளது.
சினிமா துறையில் பணம் சம்பாதித்தவர்கள், அந்த துறை தற்போது முடங்கும் நிலையில் இருந்தும் அந்த துறைக்கு எதுவுமே செய்யவில்லை. அதை விட்டு அரசியலுக்கு வந்துள்ளனர். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பா.ஜனதாவால் தான் முடியும் என்றார்.
மாநில செயலாளர் நந்தகுமார், மாநில இளைஞரணி பார்வையாளர் பாலகணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் பாபாரமேஷ், மாவட்ட செயலாளர் பாலு உட்பட பலர் பங்கேற்றனர். #tamilnews