

வாஷிங்டன்:
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக பாதிப்புகளை சந்தித்த நாடு அமெரிக்கா. அந்நாட்டில் இதுவரை 1 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, அனைத்து மாகாணங்களுக்கும் கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி முதல் அமெரிக்காவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
பயன்பாட்டிற்கு வந்துள்ள தடுப்பூசி கொரோனா தடுப்பு பணியில் உள்ள முன்கள ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள அந்நாட்டு மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என சில ஆய்வு முடிவுகள் வெளியானது.
கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் அதன் மீதான நம்பிக்கையின்மையே இதற்கு காரணம் என தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், அமெரிக்க மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையிலும், தடுப்பூசி பாதுகாப்பானது தான் என்பதை நிரூபிக்கும் வகையிலும் அந்நாட்டு மக்கள் முன்னிலையில் துணை அதிபரான மைக் பென்ஸ் அவரது மனைவி கரீன் பென்ஸ் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவுள்ளார் என வெள்ளைமாளிகை
தெரிவித்திருந்தது.
இதையடுத்து, அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் நேற்று பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மைக் பென்ஸ்க்கு கொரோனா தடுப்பூசி போடும் நிகழ்வு அமெரிக்க செய்தி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மைக் பென்சை தொடர்ந்து அவரது மனைவி கரீன் பென்சும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மக்களுக்கு கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கையை அதிகரிக்கவே தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பின்போது தடுப்பூசி போட்டுக்கொண்டதாக மைக் பென்ஸ் தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் தற்போதுவரை பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.