திருப்பூர் மாநகரில் செல்போன், பணம் பறிப்பு வழக்கில் 3 வாலிபர்கள் கைது

திருப்பூர் மாநகரில் செல்போன், பணம் பறிப்பு வழக்கில் 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாநகரில் செல்போன் பறிப்பு சம்பவங்களை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர் சுரேஷ்குமார், வடக்கு உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் ஆகியோர் உத்தரவின் பேரில் திருப்பூர் வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நேற்று முன்தினம் ராயபுரம் பகுதியில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஸ்கூட்டரில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் திருப்பூர் ராக்கியாபாளையத்தை சேர்ந்த நவுபல் (வயது 20), ராயபுரம் வள்ளுவர் காலனியைச் சேர்ந்த சதாம் உசேன் (20), கருமாரம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் (20) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த மாதம் 29-ந் தேதி பாளைக்காடு அருகே இருசக்கர வாகனத்தில் வந்த டி.என்.கே.புரத்தைச் சேர்ந்த அருண்ராஜ் (22) என்பவரை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து சென்ற சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் ராயபுரம், புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ரோட்டோரம் தூங்கிக்கொண்டிருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவங்களிலும் இவர்கள் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஸ்கூட்டர், 2 கத்திகள், ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 3 பேரையும் நீதிமன்றகாவலுக்கு அனுப்பிவைத்தனர். சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com