ஆப்கானிஸ்தான் கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் குடும்பத்தோடு பாகிஸ்தானில் தஞ்சம்

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது.
பாகிஸ்தான் கொடி
பாகிஸ்தான் கொடி
Published on

இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் முழுமையாக கைப்பற்றினர்.‌ அவர்கள் பெண்கள் வேலைக்குச் செல்லவும், ஆண்களுடன் சேர்ந்து கல்வி கற்கவும் தடை விதித்துள்ளனர். குறிப்பாக, பெண்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்துள்ளனர்.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஜூனியர் மகளிர் கால்பந்து அணியை சேர்ந்த வீராங்கனைகள் பயிற்சிக்காக கத்தார் செல்ல திட்டமிட்டிருந்தனர்.‌‌ இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது.

இந்த தாக்குதலுக்கு பின் கால்பந்து வீராங்கனைகள் 32 பேர், எங்கு செல்வது என தெரியாமல் தவித்தனர். அதுமட்டுமல்லாமல் விளையாட்டில் பெண்கள் பங்கேற்க தலிபான்கள் தடை விதித்ததால், கால்பந்து வீராங்கனைகளுக்குப் பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து, இங்கிலாந்தை சேர்ந்த அமைதிக்கான கால்பந்து எனும் தொண்டு நிறுவனம் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 32 கால்பந்து வீராங்கனைகள், அவர்களின் குடும்பத்தார் அனைவரையும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடுகளை செய்தது.

மனிதநேய அடிப்படையில் பாகிஸ்தான் அரசும் ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு உடனடியாக விசா வழங்கி அவர்களுக்கு அடைக்கலம் அளித்துள்ளது. தற்போது பெஷாவர் நகரில் உள்ள பாகிஸ்தான் கால்பந்து தலைமை அலுவலகத்தில் தங்கியுள்ள கால்பந்து வீராங்கனைகள் 32 பேர் அவர்களின் குடும்பத்தாரும் லாகூருக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com