

சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே உள்ள பட்டத்தையன் குட்டை கிராமத்தை சேர்ந்தவர் பூசமுத்து (வயது 65). இவருக்கும், இவரது மகன் லாரி டிரைவரான இளவரசனுக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அதேபோல தகராறு ஏற்பட்டபோது திடீரென்று இளவரசன் சாட்டை குச்சியை எடுத்து தனது தந்தையை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த பூசமுத்து சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவர் சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவர் இளவரசனை கைது செய்தனர்.