மருத்துவமனையில் மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா… அடுத்து நடந்தது என்ன?

தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி- சசிகலா
எடப்பாடி பழனிசாமி- சசிகலா
Published on

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார்.

இதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.

தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.

தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வினருடன் அவர் பேசிய பரபரப்பான ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அ.தி.மு. க.வினருடன் பேசும் ஆடியோக்களில், ‘நான் மீண்டும் வந்துவிடுவேன்’ என்று அவர் கூறி வருகிறார். இதனால் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.

அ.தி.மு.க.வினருடன் தொலைபேசி வாயிலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த சசிகலா முதல் முறையாக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனனின் உடல்நிலை பற்றி கேட்டறிய ஆஸ்பத்திரிக்கே நேரில் சென்றிருப்பது, அ.தி.மு.க. வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com