

ராசிபுரம்:
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பகலில் கடுமையான வெயில் அடித்தது. இந்தநிலையில் நேற்று இரவு பலத்த காற்று மற்றும் இடியுடன் மழை பெய்தது. இதனால் தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப்புறங்களில் வயல்கள் மற்றும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்த மழையால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வெண்ணந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, மின்னக்கல் பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு கனமழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரம் நீடித்தது. மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை மற்றும் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் இரவில் நிம்மதியாக தூங்கினர்.
இதேபோல நாமகிரிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று மாைல கனமழை பெய்தது. இதனால் அங்கு பிரசித்தி பெற்ற வெள்ளிச்சந்தையில் நேற்று பொருட்கள் வாங்க வந்த பெண்கள் அவதியடைந்தனர். பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மின்தடையும் ஏற்பட்டது. மேலும் சந்தைக்கு வந்த பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் சென்றதை காணமுடிந்தது குறிப்பிடத்தக்கது.