

டேராடூன்:
பாஜக ஆட்சி நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்வர் தீரத் சிங் ராவத் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அவர் செப்டம்பர் 10ம் தேதிக்குள் இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆகவேண்டிய நிலையில், அதற்கான வாய்ப்பு இல்லாததால், கட்சி மேலிட உத்தரவை ஏற்று பதவி விலகினார்.
இதையடுத்து நேற்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி (வயது 45) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இவர், உத்தரகாண்டின் கட்டிமா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
புதிய முதல்வர் பதவியேற்பு விழா, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடைபெற்றது. மாநிலத்தின் 11வது முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பேபி ராணி மயூர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சருடன் பிஷன் சிங் சவுபால், சுவோத் உனியால், அரவிந்த பாண்டே, கணேஷ் ஜோஷி, தன் சிங் ராவத், ரேகா ஆர்யா, யதீஷ்வரன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
புஷ்கர் சிங் தாமி பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு, முன்னாள் முதல்வர்கள் தீரத் சிங் ராவத், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரை சந்தித்து பேசினார். மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உத்தரகாண்ட் முதல்வர் திரத் சிங் ராவத் திடீர் ராஜினாமா