நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரண்

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரணடைந்தார். இதனையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீட் தேர்வு
நீட் தேர்வு
Published on

தேனி:

நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித்சூர்யா தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழகம் முழுவதும் நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்களும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் நீட்பயிற்சி மையத்தில் பயின்று மருத்துவகல்லூரியில் சேர்ந்ததும், ஏஜெண்டுகள் மூலம் இருந்து பல லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்து தேர்வு எழுத வைத்ததும் தெரியவந்தது. தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஏஜெண்டாக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரசீது என்பவரை தேடி வந்தனர்.

கடந்த 2 வருடங்களாக பெங்களூர், சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் அவர் தேனி கோர்ட்டில் சரணடைந்தார். இதனையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் ரசீதை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுவரை எத்தனை மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நீட்தேர்வு எழுத வைக்கப்பட்டனர். அவர்கள் எந்தெந்த பகுதியில் வசித்து வருகின்றனர். இதில் தொடர்புடைய மற்ற நபர்கள் யார், யார் என்று விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய ஏஜெண்ட் சரண் அடைந்துள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com