இங்கிலாந்துடனான டி20 தொடர் - ஆட்டநாயகன் புவனேஷ்வர் குமார், தொடர் நாயகன் விராட் கோலி

இங்கிலாந்துடனான டி 20 தொடரை 3-2 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அசத்தியது.
தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி
தொடர் நாயகன் விருது வென்ற விராட் கோலி
Published on

அகமதாபாத்:

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்று தொடரில் சமனிலை வகித்தன.

தொடரை வெல்வது யார்? என்பதை தீர்மானிக்கும் கடைசி 20 ஓவர் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 224 ரன்கள் குவித்தது. கேப்டன் விராட் கோலி ஆட்டமிழக்காமல்  80 ரன்கள் விளாசினார். இதில், 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும். ரோகித் சர்மா 34 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 64 ரன்கள் குவித்தார். சூர்ய குமார் யாதவ் 32 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 39 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தனர்.

இதையடுத்து 225 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

அந்த அணியின் ஜேசன் ராய் இரண்டாவது பந்தில் டக் அவுட்டானார். பட்லருடன் டேவிட் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தனர்.

இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர். 140 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியை புவனேஷ்குமார் பிரித்தார்.

பட்லர் 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலனை ஷர்துல் தாக்குர் ஒரே ஓவரில் வீழ்த்தினார்.

இதனால் இங்கிலாந்து அணியின் ரன் வேகம் குறைந்தது. அடுத்து வந்த வீரர்களால் ரன்கள் விரைவாக எடுக்க முடியவில்லை.

இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்கு 188 ரன்கள் மட்டுமே எடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா3-2 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றி அசத்தியது.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது புவனேஷ்வர் குமாருக்கும், தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கும் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com