

போபால்:
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.84 லட்சமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் ஆயிரத்தை தாண்டி உள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சுடுகாடுகளில் தகனம் செய்வதற்காக ஏராளமான சடலங்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் அரசு வெளியிடும் புள்ளி விவரங்களுக்கும், இந்த மரணங்களுக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இதன்மூலம் கொரோனாவால் ஏற்படும் மரணங்களை அரசு மறைப்பதாகவும் சந்தேகம் எழுப்புகின்றனர் மக்கள்.
போபாலில் உள்ள பட்படா தகன மையத்தில், திங்கட்கிழமை மட்டும் 37 சடலங்கள் தகனம் செசெய்யப்பட்டுள்ளன. எனினும் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் மாநிலம் முழுவதும் 37 பேர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் கடந்த ஐந்து நாட்களின் புள்ளிவிவரங்களும் முரணாக உள்ளன.
ஆனால் கொரோனா மரணங்களை மறைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அரசு மறுத்துள்ளது. கொரோனா தொடர்பான மரணங்களை மறைக்கவேண்டிய நோக்கம் அரசுக்கு இல்லை என்றும், அவ்வாறு செய்வதால் எங்களுக்கு விருது எதுவும் கிடைக்காது? என்றும் மருத்துவக் கல்வி துறை மந்திரி கூறி உள்ளார்.