

பெங்களூரு :
ராமநகரில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் வாழும் மராட்டிய மக்களின் வளர்ச்சிக்காக மராட்டிய மேம்பாட்டு கழகத்தை அமைத்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. நான் பொறுப்புள்ள பதவியில் இருப்பதால், அதுபற்றி கருத்து தெரிவிப்பதை விட முதல்-மந்திரி எடியூரப்பாவே விளக்கமாக எடுத்து கூற வேண்டும். கர்நாடகத்தில் வாழ்பவர்கள் அனைவரும் கன்னடர்களே. பெலகாவில் அதிகமான மராட்டியர்கள் வாழ்கிறார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் பெலகாவியில் சுவர்ண சவுதா எனது ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை அங்கு சட்டசபை கூட்டத்தொடரும் நடக்கிறது. மராட்டிய மேம்பாட்டு கழகம் அமைப்பதற்கு எதிராக டிசம்பர் 5-ந் தேதி கர்நாடகத்தில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ராமநகர் சட்டசபை தொகுதியில் நிகில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வருகின்றன. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2½ ஆண்டுகள் உள்ளன. அதனால் ராமநகரில் போட்டியிடும்படி நிகிலை வற்புறுத்தவில்லை. தேர்தல் நெருங்கும் போது அதுபற்றி முடிவு எடுத்து கொள்ளலாம். இன்னும் 2 மாதங்கள் மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்திருப்பதால், அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.