கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு கொரோனா விதிகளை பின்பற்றி நடைபெறுகிறது.
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
முதல் மந்திரி பசவராஜ் பொம்மை
Published on

பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் காலியாக உள்ள விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி, ஹாவேரி மாவட்டம் ஹனகல் ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த 2 தொகுதிகளிலும் பா.ஜ.க.,  காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அந்த 2 தொகுதிகளிலும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் மந்திரிகள், காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிந்தகி, ஹனகல் தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணியில் இருந்து இரவு 7 மணிவரை 2 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடக்கிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஓட்டுப் போடுவதற்காக ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடைத்தேர்தலை முன்னிட்டு 2 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குப்பதிவு மையங்களில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.

இந்த 2 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதேபோல், பீகார் மாநிலத்தில் தாராப்பூர், குசேஷ்வர் அஸ்தான் சட்டசபை தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் மூன்று சட்டசபை தொகுதி மற்றும் ஒரு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com