என்னை அவமானப்படுத்திவிட்டார்கள்... முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அமரீந்தர் சிங் பேட்டி

தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
அமரீந்தர் சிங்
அமரீந்தர் சிங்
Published on

சண்டிகர்:

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் பெரிய அளவில் வெடித்துள்ளது. முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்த கருத்து வேறுபாடு உச்சகட்டத்தை எட்டியது. 

அமரீந்தர் சிங்கிற்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் இன்று பதவியை ராஜினாமா  செய்தார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமரீந்தர் சிங், தன்னை அவமானப்படுத்திவிட்டதாக வேதனையுடன் கூறினார்.

“பேச்சுவார்த்தை நடந்த விதம் என்னை அவமானப்படுத்துவதுபோல் இருந்தது. இன்று காலை காங்கிரஸ் தலைவரிடம் பேசினேன். அப்போது, ராஜினாமா செய்வதாக அவரிடம் சொன்னேன். சமீபத்திய மாதங்களில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டுவது இது மூன்றாவது முறை. அதனால்தான் நான் விலக முடிவு செய்தேன். கட்சி தலைமை யாரை நம்புகிறதோ, அவரை முதல்வர் ஆக்கட்டும். இப்போது நான் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து எதிர்கால திட்டம் குறித்து முடிவு செய்வேன்’ என்றார் அமரீந்தர் சிங்.

அமரீந்தர் சிங் ராஜினாமா செய்ததையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜாக்கர் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com