

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் டிஜிட்டல் முறையில் மாறி வரும் நிலையில், மத்திய அரசு இலவச லேப்டாப் வழங்குவதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் விர்ச்சுவல் கல்வி முறையை ஊக்குவிக்கும் வகையில் அனைவருக்கும் இலவச லேப்டாப் வழங்கப்பட இருப்பதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் பதிவுகளில் உண்மையில்லை என்றும், இலவச லேப்டாப் வழங்குவது பற்றி எந்த அறிவிப்பையும் மத்திய கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை என்றும் மத்திய அரசு நிறுவனமான பி.ஐ.பி. (பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக இந்தியாவின் 24 மாநிலங்களை சேர்ந்த சுமார் 2.96 கோடி மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்தும் வசதி பெறவில்லை என மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதில் பீகார் மாநிலத்தில் அதிகபட்சமாக 1.43 கோடி மாணவர்களிடம் டிஜிட்டல் சாதனங்கள் இல்லை.
இதைத் தொடர்ந்து ஜார்கண்ட்டில் சுமார் 35.52 லட்சம், கர்நாடகாவில் சுமார் 31.31 லட்சம், அசாமில் சுமார் 31.06 லட்சமும், உத்தரகாண்டில் சுமார் 21 லட்சம் மாணவர்கள் டிஜிட்டல் சாதனங்களை இயக்கும் வசதி கொண்டிருக்கவில்லை.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.