டெல்டா வைரஸ் பற்றி இந்த தகவல்களை நம்ப வேண்டாம்

டெல்டா வைரஸ் பற்றி பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இந்தியாவில் உருவான டெல்டா வைரஸ் தற்போது உலகின் நூற்றுக்கும் அதிக நாடுகளில் பரவி இருப்பதாக உலக சுகாதார மையம் கணித்துள்ளது. பிரிட்டனில் 90 சதவீத கொரோனா நோயாளிகள் டெல்டா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அறிவியல் ரீதியாக டெல்டா வைரஸ் B.1.617.2 என அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் முந்தைய ஆல்பா வேரியண்டை விட 40 முதல் 50 சதவீதம் வேகமாக பரவக்கூடியது ஆகும். இந்த வைரஸ் குறித்த இதர விவரங்களை கண்டுபிடிக்கும் பணிகளில் ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், டெல்டா வேரியண்ட் ஏற்படுத்தும் அறிகுறிகள், அதன் தீவிரத்தன்மை குறித்து பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

அதன்படி 'டெல்டா வைரஸ் ஏற்பட்டால் இருமல், காய்ச்சல் எதுவும் ஏற்படாது. ஆனால் மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, முதுகுவலி, சோர்வாக உணர்தல் போன்றவை ஏற்படும்.  இத்துடன் ஸ்வாப் பரிசோதனையிலும் இந்த வைரஸ் இருப்பதை கண்டறிய முடியாது,' என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

உண்மையில் டெல்டா தொற்று ஏற்பட்டால் தொடர்ச்சியான இருமல், தலைவலி, காய்ச்சல் மற்றும் தொண்டை வறண்டு போவது உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். பிரிட்டனில் டெல்டா தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு தொண்டை வறண்டு போவது, மூக்கடைப்பு, சைனஸ் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட்டு இருக்கிறது.

டெல்டா தொற்று மற்ற வைரஸ்களை விட 50 சதவீதம் வேகமாக பரவும் என்பது உண்மை தான். ஆனால் மற்ற தொற்றுகளுக்கு பின்பற்றப்படும் பாதுகாப்பு வழிமுறைகளை செய்தாலே, டெல்டா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும். 

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com