

சுரண்டை:
தென்காசி சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக எஸ்.பழனி நாடார் போட்டியிடுகிறார். அவர் நேற்று வீரகேரளம்புதூர் தாலுகாவில் உள்ள கிராமங்களுக்கு திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
காலையில் வாடியூரில் பிரசாரத்தை தொடங்கிய பழனிநாடார் பின்னர் மரியதாய்புரம், பரங்குன்றாபுரம், லட்சுமிபுரம், அச்சங்குன்றம், கருவந்தா, வீராணம், ஏந்தலூர், சோலைசேரி, ஊத்துமலை, வடக்கு காவலாகுறிச்சி, முத்தம்மாள்புரம், மருக்காலங்குளம் கரையாளனூர், குறிச்சான்பட்டி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், வேலாயுதபுரம், பலபத்திரராமபுரம், கங்கணாங்கிணறு, அண்ணாமலைப்புதூர், நவநீதகிருஷ்ணபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தின்போது பழனிநாடார் பேசியதாவது:-
சுரண்டை அருகே உள்ள இரட்டை குளம் முதல் ஊத்துமலை வரையிலான இரட்டை குளம் உபரி நீர் கால்வாய் திட்டம் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நான் வெற்றி பெற்றதும் இரட்டை குளம் உபரிநீர் கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றுவேன்.
ஊத்துமலையை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் தொடங்கப்படும். வீரகேரளம்புதூரில் இருந்து தாலுகாவின் அனைத்து பகுதிகளுக்கும் போதிய பஸ் வசதி செய்து தரப்படும். கிராமங்களில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை உடனடியாக சரி செய்யப்படும். எனவே அனைவரும் கை சின்னத்தில் வாக்களித்து என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பழனிநாடார் பிரசாரம் மேற்கொண்ட கிராமங்களில் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
இதில் ஊத்துமலை ஜமீன் முரளிராஜா, மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாபன், ம.தி.மு.க. செயலாளர் தி.மு.ராஜேந்திரன், ஆலங்குளம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மு.அன்பழகன், ம.தி.மு.க. செயலாளர் மருதசாமி பாண்டியன், காங்கிரஸ் நிர்வாகிகள் வீராணம் முஸ்தபா, அந்தோணி, லட்சுமிபுரம் குத்தாலிங்கம், தாயார்தோப்பு ராமர்,
தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் கலிங்கப்பட்டி சுப்பிரமணியன், சுரண்டை கே.டி.பாலன், வீராணம் ஷேக் மதீன், மருதப்ப பாண்டியன், ம.தி.மு.க. நிர்வாகிகள் வக்கீல் அந்தோணி, லெனின், அருள்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் வீராணம் அப்துல் முத்தலிப் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.