13 வகை மளிகைப் பொருள், 2ஆம் தவணை நிவாரண நிதி -முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்

ரேசன் கடைகளில் மளிகைப் பொருள் தொகுப்பு வழங்குவது தொடர்பாக, கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ரேசன் கடைகளில் கொரோனா நிவாரணமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2ம் கட்டமாக மேலும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், மக்களின் சிரமங்களை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 13 வகையான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. நிவாரணப் பொருட்களை பெற பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதேபோல் 2ஆம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com