புயல், மழையால் பாதிப்பு- தண்ணீர் தேங்கிய வயல்களில் இறங்கி பயிர் சேதங்களை பார்வையிட்ட முதலமைச்சர்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பயிர்களை பார்வையிட்ட முதலமைச்சர்
பயிர்களை பார்வையிட்ட முதலமைச்சர்
Published on

திருவாரூர்:

புரெவி புயல் காரணமாக, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் பலத்த மழை நீடித்து வருகிறது. இதனால், நாகை மாவட்டத்தில் சுமார் 1,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. 60 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். நாகையில் உள்ள நாகூர் தர்கா குளம் மழையால் இடிந்து விழுந்த பகுதிகளை முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதையடுத்து கருங்கண்ணியில் புயல், மழையால் ஏற்பட்ட பயிர்சேத பாதிப்புகளையும் கனமழையால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களை ஆய்வு செய்து விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றார்.

திருவாரூர் மாவட்டம் சென்ற முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொக்காலடியில் தண்ணீர் தேங்கிய வயல்களில் இறங்கிய முதலமைச்சர், அழுகிய பயிர்களை விவசாயிகளிடம் இருந்து கையில் வாங்கி பார்வையிட்டார். சேத விவரம் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும் திருத்துறைப்பூண்டியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com