560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி நல உதவிகளை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

நலிந்தோருக்கான உதவி தொகை, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

தமிழக முதல்- அமைச்சரும் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

முதலாவதாக கொளத்தூர் பள்ளி சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதார திட்டத்தின் கீழ் இயங்கக் கூடிய, வருமுன் காப்போம் என்ற சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து கொளத்தூர் எவர்வின் தனியார் பள்ளி வளாகத்தில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், 5 பேருக்கு திருமண நிதியுதவி, 2 பேருக்கு வங்கி கடன் மானியம், கொரோனாவில் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு தலா 3 லட்சத்திற்கான காசோலை வழங்கினார்.

மேலும் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பெறப்படும் நலிந்தோருக்கான உதவி தொகை, சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரண நிதி என மொத்தம் 560 பயனாளிகளுக்கு 2 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கி சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கொளத்தூர் சிவ இளங்கோ சாலையில் விஸ்டா என்ற பல் மருத்துவமனையை திறந்து வைத்தார். பின் ஜி.கே.எம் காலனி 12-வது தெருவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும் பள்ளி மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் மேஜை, நாற்காலிகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவ மற்றும் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்ரமணியம், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி, சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com