

புதுடெல்லி:
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், இமாச்சாலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
திருமணம் செய்வதற்காக பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்கும் வகையில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி 10 ஆண்டு சிறை, ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்க முடியும்.
இந்த சட்டத்துக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருமணம் என்னும் பெயரில் கட்டாய மதமாற்றம் நடைபெறுவதை தடுக்க மதமாற்ற தடை சட்டத்தை இயற்றும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி வி.கிஷன் ரெட்டி டெல்லி மேல்சபையில் கூறியதாவது:-
அரசியல் அமைப்பின் 7-வது அட்டவணையின்படி சட்டம்-ஒழுங்கு, காவல் துறை ஆகியவை மாநில அரசின் அதிகார வரம்புக்கு உட்பட்டவை.
எனவே மதமாற்றம் தொடர்பான சட்ட விரோத நடவடிக்கைகள் குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே நட வடிக்கை எடுக்க வேண்டும்.
வெவ்வேறு மதத்தினர் இடையே நிகழும் திருமணங்களை தடுக்க மதமாற்ற தடை சட்டம் இயற்றும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.