அமைச்சர் கார் அருகே பட்டாசு வெடித்த அ.ம.மு.க.வினர் 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றியும், பாதுகாப்பு அற்ற முறையிலும் பட்டாசு வெடித்ததாக அ.ம.மு.க. நகர செயலாளர், நகர பொருளாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு
வழக்கு பதிவு
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் இரவு தொகுதிக்கு உட்பட்ட மந்தித்தோப்பு சாலையில் பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் பிரசாரத்தை முடித்துவிட்டு அன்னை தெரசா நகர் வழியாக காரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு அ.ம.மு.க.வினர் பிரசாரம் மேற்கொண்டு இருந்தனர்.

அவர்கள் அந்த வழியாக அமைச்சரின் கார் வந்தபோது அதனை சுற்றிலும் பட்டாசு வெடித்துள்ளனர். இதனால் தேர்தல் தோல்வி பயத்தால் தன்னை கொல்வதற்கு சதி நடப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ புகார் கூறினார்.

இதையடுத்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் அளித்த புகாரின்பேரில் அனுமதியின்றியும், பாதுகாப்பு அற்ற முறையிலும் பட்டாசு வெடித்ததாக அ.ம.மு.க. நகர செயலாளர் கார்த்திக், நகர பொருளாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் போக்கு வரத்திற்கு இடையூறாகவும், அனுமதியின்றியும் அங்குள்ள பள்ளி அருகில் பட்டாசு வெடித்ததாக சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் அளித்த புகாரில் அ.ம.மு.க. நிர்வாகிகள் கார்த்திக், கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் மீது தனித்தனியாக 4பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com