புல்வாமா தாக்குதல் : பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது - அமித்ஷா புகழஞ்சலி

புல்வாமா தாக்குதல் சம்பவத்தின் 2-வது நினைவு தினத்தையொட்டி, அத்தாக்குதலில் பலியான வீரர்களின் தியாகத்தை இந்தியா எப்போதும் மறக்காது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் நினைவுச்சின்னத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. தீபக் ரத்தன் அஞ்சலி
புல்வாமா தாக்குதலில் பலியானவர்களின் நினைவுச்சின்னத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஐ.ஜி. தீபக் ரத்தன் அஞ்சலி
Published on

புதுடெல்லி:

காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி பாதுகாப்பு படையினரின் வாகனங்கள் அணிவகுத்து சென்று கொண்டிருந்தன. அப்போது, பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாதி ஒருவன், வெடிகுண்டுகள் நிரப்பிய தனது காரை வெடிக்கச் செய்தான்.

இதில், ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்த 39 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களும், களப்பணியில் இருந்த ஒரு அதிகாரியும் பலியானார்கள். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாமை இந்திய போர்விமானங்கள் தாக்கி அழித்தன.

இந்தநிலையில், புல்வாமா தாக்குதலின் 2-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், பலியான வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

அதில், ‘‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த துணிச்சலான தியாகிகளுக்கு தலை வணங்குகிறேன். அவர்களின் அபரிமிதமான வீரத்தையும், அளப்பரிய தியாகத்தையும் இந்தியா எப்போதும் மறக்காது’’ என்று அவர் கூறியுள்ளார்.

அதுபோல், புல்வாமா மாவட்டம் லேத்போராவில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாமில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. பலியான வீரர்களின் நினைவுச்சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

டெல்லியில் உள்ள ரிசர்வ் போலீஸ் படை தலைமையகத்தில் இருந்தபடி, உயர் அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்றனர்.

ரிசர்வ் போலீஸ் படை தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், ‘‘புல்வாமா தாக்குதலை மன்னிக்க மாட்டோம். வீரர்களின் தியாகத்தை மறக்க மாட்டோம். அவர்களுக்கு கடன்பட்டுள்ளோம். அவர்களின் குடும்பத்துக்கு துணை நிற்போம்’’ என்று கூறியுள்ளது.

மேலும், பலியான வீரர்களின் நினைவாக 5 மணி நேரம் ஓடும் ஒரு வீடியோவை ரிசர்வ் போலீஸ் படை தலைமை இயக்குனர் மகேஸ்வரி வெளியிட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com